<p>பெரிய இடத்து விஷயத்தில் தலையிடுவது ஆபத்தானது. சமுதாயத்தின் விஷப் பார்வை பெரிய இடம் - சிறிய இடம் பார்ப்பதில்லை. ஒழுக்கம், நாணயம் இவைகளில் யாரும் தவறிவிடுவது வழக்கந்தான். </p><p></p><p>ஆனால் 'பெரிய இடம்'என்ற வார்த்தையால் எவ்வளவோ ஊழல்கள் மறைக்கப்பட்டு விடுகின்றன. அவை அம்பலத்திற்கு வந்தால்தான் சமுதாய இழிவுகள் துடைக்கப்பட ஒரு நல்ல மார்க்கம் ஏற்படும் என்பது துணிபு. எத்தனையோ பண்ணைகளில் படாடோபக்காரர் மாளிகைகளில், அழுகிப்போன செய்திகள் நாற்றமெடுத்தபிறகே, நாட்டினர்க்குத் தெரிகிறது. ஆனாலும், 'பெரிய இடம்'என்ற பேச்சு ஊர் வாயை மூடிவிடுகிறது. </p><p></p><p>'பெரிய இடத்துப் பெண் 'இழிந்த சமுதாயத்தின் கிழிந்த திரையை விலக்கட்டும்! </p><p></p><p>அரும்பிய சிறு மீசைகள், அவசரத்தையே காட்டிக்கொண்டிருக்கும் அசைவுகள், அலட் சியமாகப் பார்வையைச் சிந்தும்போது அவன் ஒரு பாட்டாளி என்பதை மறந்துவிடுவான். அவன்தான் வீட்டு வண்டிக்காரன் வீரன். சீமான் வீட்டுச் செல்விக்கும், விலாவொடியப் பாடுட்டும் வீரனுக்கும் நிரம்பப் பொருத்தம். இப் பொருத்தம் ஏற்படச் சமுதாயம் ஒரு தடையல்லவா? </p><p></p><p>அதனைச் சூழ்ந்துள்ள சாத்திரங்கள் அவன் வாழ்க்கைக்கு ஒரு சாக்காடு. அதனை- அறுத்தெறிந்ததே 'இப் பெரிய இடத்துப் பெண்ணின்'பணி. </p><p>இக் கருத்துக்களைத் தெளிவுபட, தெரிக்கும் நடையில் தீட்டித்தந்தவர் தோழர் மு. கருணாநிதி அவர்கள். </p><p></p><p>தமிழ் நாட்டின் மூலை முடுக்குகளெல்லாம், திராவிட முரசொலித்துவரும் இவரை அறிமுகப்படுத்துவது, கரும்பை இனிப்பென்பது போல! அவர்கட்து எங்கள் மனமுவந்த நன்றி! </p><p></p><p></p>